ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பரசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், சேலம் சேகோ சர்வ் நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவரை விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், கட்சி சார்பற்ற விவசாய சங்க நாமகிரிப்பேட்டை பொறுப்பாளர் ராஜா, கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் நல கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் ராம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஜவ்வரிசி விற்பனை குறைந்து விலை குறைந்துள்ளதால், மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையாக சரிவடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் விடுதிகள், சிறைச்சாலை மற்றும் பல்வேறு நிலைகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஜவ்வரிசி மூலம் தயாரிக்கப்பட்டு உணவு வகைள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல மாதந்தோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசியுடன் 2 கிலோ ஜவ்வரிசி வழங்க வேண்டும். கேரள மாநிலம், திருவணந்தபுரத்தில் உள்ளதுபோன்ற, மத்திய அரசின் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகளை பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பரசன் கூறினார்.




