விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்தியா முழுவதும் கடந்த 27ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
நேற்று நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, மெட்டாலா, சேலம் மாவட்டம் மல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வைத்து வணங்கப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஆட்டோ, வேன், லாரி மற்றும் டூ வீலர்களில், மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் வைத்து பூஜை செய்து வணங்கினார்கள், தொடர்ந்து காவிரி ஆற்றின் மையப் பகுதிக்கு சிலைகளை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைத்து விசர்ஜனம் செய்தனர்.
பாதுகாப்பு கருதி ஏராளமான சிசிடிவி கேமராக்கள், மின்சார விளக்குகள் அதிக எடை உள்ள சிலைகளை தூக்கிச் சென்று கரைக்கும் வகையில் கிரேன் இயந்திரம் போன்றவை மோகனூர் பேரூராட்சி மற்றம் காவல்துறை சார்பில்முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன,
ஏடிஎஸ்பி. விஜயராகவன், டிஎஸ்பி சக்திவேல், மோகனூர் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், பேரூராட்சி பணியாளர்கள், பொதுப்பணி துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கொண்டுவரப்பட்ட 1 அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட 500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் ஊர்வலத்தில் நாமக்கல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாமக்கல்லில் இருந்து மோகனூர் வரை காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.




