முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி, (35). அவர், மல்லசமுத்திரம் ஒன்றியம், பாலமேடு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார்.
இவர் பணியாற்றும் பாலமேட்டில், உரிய அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக தகவல் வந்ததை அடுத்து, கடந்த 19ம் தேதி, சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்ற வி.ஏ.ஓ., சிவகாமி மணல் கடத்தலை தடுத்து நிறுத்தினார்.
அன்று இரவு, அதேப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், வீடு புகுந்து வி.ஏ.ஓ. சிவகாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை சரமாரியாக தாக்கினார்.
விஏஓவை தாக்கிய சீனிவாசசனை பொதுமக்கள் பிடித்து, எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த எலச்சிப்பாளையம் காவல்துறையினர் வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைந்தனர்.
இதற்கிடையில், பெண் வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி, வி.ஏ.ஓ.,க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, வி.ஏ.ஓ.,வை தாக்கிய சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி. விமலா, நாமக்கல் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்தரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, மணல் கடத்திய சீனிவாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு, சேலம் மத்திய சிறையில் உள்ள சீனிவாசனிடம் வழங்கப்பட்டது.




