Close
மார்ச் 7, 2026 1:47 மணி

மனுநீதி நாள் திட்ட முகாம்; ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர், வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் சிவா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சிறப்புரையாற்றி பேசியதாவது,

ஜமுனாமரத்தூர் பகுதியில் இந்த மக்கள் தொடர்பு முகமானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக தரைப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கும் தேவைகள் என்பது வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்வதற்கு கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் மலைப்பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது எப்படி என்று பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது ஜவ்வாதுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் ஜவ்வாதுமலை பகுதி வனத்துறை சட்டத்தின் கீழ் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இங்கு வசிப்பவர்களுக்கு மலையில் விளையும் பொருட்களை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வது எப்படி என்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்காக வார சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜவ்வாதுமலைப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிக அளவில் முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதால் உடல் நலம் மட்டும் இல்லாமல் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் கலைஞர் கனவு இல்லம் கட்டும் திட்டப்பணிகள் அதிகரிக்கப்படும். சாலைகளும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வருகின்ற செப் 11ம் தேதி அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம் அலுவலர்களும் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

மேலும் மக்களும் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வாயிலாக இந்த முகாமில் மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், விதவைச் சான்று, வாரிசு சான்று, முதல் பட்டதாரி சான்று, திருமண நிதி உதவி ஈமச்சடங்கு நிதியுதவி மற்றும் சாமை தொகுப்பு போன்றவற்றை பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ரேணுகோபால், ஒன்றிய செயலாளர்கள் கேசவன், சிவசேமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top