தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர்.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, செப். 1 முதல் ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு, சாதாரண நெல்லுக்கு ரூ. 2,500 மற்றும் சன்னரக நெல்லுக்கு ரூ. 2545 என விலை நிர்ணயம் செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது.
திமுக கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான, நெல்லுக்கு உண்டான ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்பதை தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்து, 4 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் அறிவித்துள்ளது.
திமுக அரசு 4 ஆண்டு காலம் ஆட்சி செய்த பிறகு தற்போது நெல்லுக்கு உண்டான ஆதார விலையை அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நெல் உற்பத்தி செய்வதற்கு உண்டான உரம், பூச்சி மருந்து,உழவு கூலி, நாற்று நடவு வேலை ஆட்கள் கூலி மற்றும் இதர செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த விலை தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. எனவே தமிழ்நாடு அரசு தமிழக விவசாயிகளின் நலன் கருதி உற்பத்தி செலவினங்களை கணக்கீடு செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.3,500 என உயர்த்தி அறிவிக்க கோரி ஏற்கனவே பல முறை கோரிக்கை வைத்தோம்.
தற்போது அறிவித்துள்ள விலையை மாற்றி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லுக்கு உண்டான ஆதார விலையை ரூ. 3,500 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




