மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 379.29 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 55.78 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், ஜூலை மாதம் வரை நெல் 642 எக்டர், சிறுதானியங்கள் 23484 எக்டர், பயறு வகைகள் 4217 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 19963 எக்டர், பருத்தி 486 எக்டர் மற்றும் கரும்பு 4398 எக்டர் என மொத்தம் 5,3190 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 324 எக்டர், கத்திரி 144 எக்டர், வெண்டை135 எக்டர், மிளகாய் 58 எக்டர், மரவள்ளி 302 எக்டர், வெங்காயம் 1526 எக்டர், மஞ்சள் 1906 எக்டர் மற்றும் வாழை 1756 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில்,கரும்பு பயிருக்காக பள்ளிபாளையம் வட்டாரம், சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி, 2 ஆம் பரிசு பெற்றமைக்கு ரூ. 1.50 லட்சத்திற்கான பேங்க் டிராப்ட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் பேசியதாவது: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தனியார் தோல் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க கூடாது.
இந்தியாவில் மத்திய அரசின் தேசிய வேளாண்மை பல்கலைக்கழகம், வட இந்தியாவில் 3 இடங்களில் அமைந்துள்ளது. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசிய வேளாண் பல்கலை அமைக்க வேண்டும்.
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்கப்படாமல் 16 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக இயக்க வேண்டும் என கூறினார்.
கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.




