நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியாக சென்றோர் அளித்த தகவலின் பேரில் நாமக்கல் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர், நாமக்கல் கொண்டிச் செட்டிப்பட்டி கணபதி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பிரேம்குமார் மகன் மனோ (19) என்பதும், அவர் பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), 2ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
வியாழக்கிழமை இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட மனோவின் செல்போனில் இறுதியாக பேசிய அழைப்புகளைக் கொண்டும், அந்தப் பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், மனோ கொலையாவதற்கு முன்பு டூ வீலரில் அவரது வீட்டுக்கு வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்து போலீசார் விசாரித்தபோது, மனோ வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும், பட்டறையில் வேலை செய்யும், 17 வயது சிறுவர்கள் இருவர் என்பதை கண்டறிந்தனர்.
அந்த இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்களில் ஒருவரின் சகோதரியை, கொலை செய்யப்பட்ட மனோ கிண்டல் செய்ததாகவும், ஏற்கனவே கொடுத்த ரூ. 3,500 பணத்தைக் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மனோவை தனியாக டூ வீலரில் அழைத்துச் சென்று புதர் மறைவில் வைத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அங்கிருந்து தப்பி திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உறவினர் வீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர்.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கைப்பற்றினார்கள். 17 வயது சிறுவர்கள் என்பதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.




