Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்திப்பிரிவு: நாளை துவக்க விழா

நாமக்கல்லில், மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப் பிரிவு துவக்க விழா நாளை நடைபெற உள்ளது, 2 அமைச்சர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு நாமக்கல்லில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தந்த, தமிழ்நாடு முதலமைச்சரிடம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கி வரும் எத்தனால் பிரிவை விரிவுபடுத்தி, எத்தனால் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்கனவே தினசரி 30 ஆயிரம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதலாக 20 ஆயிரம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் வகையில் எத்தனால் உற்பத்தி பிரிவை விரிவுபடுத்தி, நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் எத்தனால் தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக ரூ. 7 கோடி மதிப்பீட்டில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கம்பெனி மூலம் எத்தனால் கூடுதல் பிரிவு அமைக்கப்பட உள்ளது. கூடுதல் எத்தனால் பிரிவு அமைக்கும் பணிகள் துவக்க விழா நாளை 3ம் தேதி காலை 11 மணிக்கு சர்க்கரை ஆலையில் நடைபெறுகிறது.

தமிழக சர்க்கரைத்துரை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, எத்தனால் உற்பத்தி விரிவாக்கப்பிரிவு கட்டுமானப் பணிகளை துவக்கி வைக்கின்றனர்.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலில் கூடுதலாக எத்தனால் கலக்கலாம் என அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆலையின் வருவாய் உயர்ந்து, கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை உடனுக்குடன் வழங்க முடியும். மேலும் ஆலை லாபத்தில் செயல்பட்டு தற்சார்பு அடையும்.

தமிழகத்தில் உள்ள, மோகனூர் உள்ளிட்ட 11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், கடந்த திமுக ஆட்சியில் இணை மின் உற்பத்தி திட்டம் துவக்கப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இணை மின் திட்டப்பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தி திட்டப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top