தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடக்க துணைபுரியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வரும், 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையில் உள்ள அரசுப் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும், வரும், 10ம் தேதி மாலை 3 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுடன் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடக்கிறது.
மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




