திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து பழங்கள் அடங்கிய கூடையை வழங்கி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார் . தொடர்ந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது,
ஜவ்வாதுமலை சாலையில் திடீரென காட்டெருமை குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானது என ஓட்டுனர் தெரிவித்துள்ளார். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது பேருந்து உள்ளே கம்பி, கண்ணாடி போன்றவற்றால் காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் சிகிச்சை முடித்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
குழந்தைகளுக்கு கண், காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அதற்கான சிறப்பு மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை நல்ல முறையில் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி வழக்கம்போல் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அரசு ஒப்பந்ததாரர் துரை வெங்கட், மாநகர துணை மேயர் ராஜாங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.




