மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன், இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு, நீதிபதிகள் குடியிருப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பணிக்கு, செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை ரிங்ரோட்டில் வந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த கல்லில் மோதி கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ,அஜய்யை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி ஆர்த்தி அளித்த புகாரின் பேரில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




