Close
மார்ச் 7, 2026 1:17 மணி

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கும்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கூடுதல் எத்தனால் தயாரிப்பு பிரிவை அமைச்சர்கள் ராஜேந்திரன், மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில் ராஜேஷ்குமார், எம்.பி.,

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக சர்க்கரைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்தி பிரிவுக்கான கட்டுமானப் பணி துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, சர்க்கரைத்துறை இயக்குனர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சர்க்கரைத்துறை மற்றும் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், கூடுதல் எத்தனால் பிரிவு கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், முதல் எத்தனால் ஆலை என்ற பெருமையைப் பெற்றுள்ள, மோகனூர் சர்க்கரை ஆலையில், கடந்த 1993ம் ஆண்டு, ரூ. 14 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்டு எத்தனால் உற்பத்தித் துவங்கப்பட்டது.

தற்போது தினசரி 30 ஆயிரம் லிட்டர் எத்தனாலும், 10 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட எத்தனாலும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

2011 முதல், 2021 வரை, 10 ஆண்டுகள் தமிழகத்தில் நடைபெற்ற காலம், ஒரு கட்சி ஆட்சியில், கரும்பு விவசாயிகளுக்கு, 10 ஆண்டுகளில், ஒரு டன்னிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து, கூடுதலாக ரூ. 850 ரூபாய் வழங்கினார்கள். ஆனால், தற்போதைய தமிழக முதல்வருக்கு, கரும்பு விவசாயிகள் மீது இருக்கிற கனிவான பார்வையின் காரணமாக, 4 ஆண்டுகளில், ஒரு டன் ஒன்றுக்கு ரூ. 750 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையாக, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 349 உயர்த்தி வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், தமிழக முதல்வர், 6 லட்சத்து 9,030 கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் வழிவகை கடன் என ரூ. 1,945 கோடி வழங்கி உள்ளார்.

கரும்பு வெட்டுக்கூலி அதிகம் என்பது உண்மைதான். கரும்பு விவசாயிகளுக்கு வெட்டுக்கூலி இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, வேளாண் பல்கலை மற்றும் பொறியியல் துறை இணைந்து சிறு கரும்பு அறுவடை இயந்திரத்தை உற்பத்தி செய்து வழங்க இருக்கிறோம்.

மரவள்ளியில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு இயந்திரத்தை மாற்றுவதற்கான பணி அதிகம் இருக்கிறது. எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம் துணையோடு, அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றப்படும்.

கடந்த ஆட்சியில், ஒரு டன் கரும்புக்கு, ரூ. 2,750 வழங்கினர். தற்போது, ரூ. 3,500 ஆக முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார். எதிர்காலத்தில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாநகர துணை மேயர் பூபதி, செயலாட்சியர் குப்புசாமி, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, அட்மா தலைவர் சண்முகம், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top