நாமக்கல்லில், கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட மற்றும் மண்டல அளவில் 22.8.2025 முதல் 12.9.2025 வரை போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் 178 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கோவை மண்டல அளவிலான, முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று மண்டல அளவில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவினருக்கும், நாளை 4ம் தேதி பள்ளி, கல்லூரியை சேர்ந்த பெண்கள் பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெறும்.
இதில் நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 265 மாணவ மாணவிகள் வாள்விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




