Close
மார்ச் 7, 2026 1:46 மணி

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை: பணிகளை தொடர கலெக்டர் உத்தரவு

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

அணைப்பாளையத்தில், ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம்  அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, எனவே கட்டுமானப்பணிகளை தொடரலாம் என மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாடண்ட் அமைப்பது குறித்து, ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2.7.2024ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேருந்து நிலையம் மற்றும் நெடுஞ்சாலையிலிருந்து அணுகு சாலை அமைப்பதற்கான நிலத்தை தனியார் ஒருவர் தானமாக அளிக்க முன்வந்ததை நகராட்சி ஏற்றுக்கொண்டது.

பின்னர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் முன்அனுமதி பெறப்பட்டது. மொத்த செலவினத்திற்கான ரூ.10.58 கோடியில் பாதித்தொகையை நகர மேம்பாட்டு நிதியின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கியது.

அதனடிப்படையில் பேருந்து நிலையம்  அமையவிருக்கும் நிலத்தில் கட்டுமானத்தை உறுதிசெய்வதற்காக மண் சோதனை தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் ஆராயப்பட்டது. ஏற்கனவே விவசாய நிலமாக இருந்த அந்த நிலத்தின் வகைப்பாடு மாற்றப்பட்டு அது சர்க்கார் புறம்போக்கு என்று நிலவகை மாற்றம் செய்யப்பட்டது.

பேருந்து நிலையம் அமைப்பதற்கான டென்டர் கோரப்பட்டு, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்திற்கெதிராக சில அமைப்புகளால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க போடப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும், தானமாக நிலத்தைப் பெறக்கூடாது என்றும் கூறி நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல்செய்தனர்.

இந்த வழக்குகளை முடிவுக்குக்கொண்டு வந்த உயர்நீதிமன்றம் நகராட்சி தீர்மானத்திற்கு எதிரான பிரச்சினையை விசாரித்து முடிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும் நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்த மனுதாரர்களைத் தனியாக அழைத்து அவர்களது பிரச்சினையை நேரில் கேட்பதற்கு தீர்ப்பில் உத்திரவிடப்பட்டது.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ராசிபுரம் நகராட்சி ஆணையர் புதிய பேருந்து நிலைய பிரச்சினையில் பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்பதற்காக ஒரு பொது அறிவிக்கையை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் ராசிபுரம் பொதுமக்களிடமிருந்தும், சில தனியார் நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள் அரசியல் கட்சிகளிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 7,609. அம்மனுக்களை தனித்தனியாக பரிசீலித்ததில் 4,444 மனுக்கள் புதிய இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஆதரவாகவும், 3,165 மனுக்கள் புதிய இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதிலும் ஒருசிலர் தவிர மற்றவர்கள் தற்போது நகருக்குள் இயங்கும் புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும்,  அதனால் ராசிபுரத்திற்கு அருகாமையில் ஏதேனும் ஒரு இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

13.8.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்த 15 பேரையும் நேரில் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தார். அதில் 14 பேர் பங்கு கொண்டனர். அவர்களது கருத்துகள் ஆட்சியர் மூலம் பதிவு செய்யப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மனுக்கள் அதன் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆவணங்கள், கருத்துகேட்பு விசாரணையின்போது கூறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதிப்பேராணையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆட்சேபணைகள் இவற்றையெல்லாம் நன்கு பரிசீலித்து 25.8.2025 அன்று மாவட்ட ஆட்சியர்  தனது இறுதி உத்திரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி நகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டாமென்றும், அணைப்பாளையத்தில் புதிய புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முழு முடிவையும் எடுக்கக் கூடிய அதிகாரம் நகராட்சிக்கு உண்டு என்றும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலத்தை தானமாகப் பெற்றதில் எவ்வித முறைகேடும் இல்லை என்றும், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் நிலம் கட்டுமான தரம் கொண்டது என்றும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதால் ராசிபுரம் மக்களுடைய பொது நன்மைக்கு பாதிப்பு ஏதுமில்லை என்றும் தன்னுடைய நீண்ட உத்திரவில்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top