நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், ஆசிரியர் தின விழா, வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். நூலகர் செல்வம் வரவேற்றார்.
மாவட்டக் கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசினார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுமதி மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைஆசிரியர் பிரபு, கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மகேந்திரன், நாமக்கல் விநாயகா மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் ராமராஜ், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் வெங்கடேசன், ஆகியோருக்கு சாவித்திரிபாய் புலே அர்ப்பணிப்பாசிரியர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அன்னம் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரிஹரகோபால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்க்கையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பேசினார்.
மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், கவிஞர் சிந்தனை பேரவை செயலாளர் செந்தில்குமார், துணை பிடிஓ பிரேமலதா, நம்மாழ்வார் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், நாமக்கல் வடக்கு பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, சின்னமுதலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா, ராசிபுரம் தமிழ் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி, நூலக புரவலர்கள் ராமசாமி, வாசு சீனிவாசன், புலவர் தங்கவேல், ராஜ்குமார், அழகப்பன், பாபு விஜயன், சுப்பிரமணி, அன்பழகன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
விழாவில் சின்னமுதலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர் அமல்ராஜ் நன்றி கூறினார்.




