பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்தநிலையில் ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி வருகிற செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 1.41 மணி முதல் தொடங்கி செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.38 மணி வரை கிரிவலம் செல்வது சிறந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் மலையை வலம் வந்து கிரிவல வழிபாடு செய்வது பக்தர்கள் பலரின் வழக்கமாக உள்ளது. அப்படி திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்பவர்கள் சந்திர கிரகணம் செல்லும் நேரத்தில் கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ளலாமா? கூடாதா?
சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இது முழுமையான சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 09.56 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணிக்கு துவங்குவதாக சொல்லப்படுகிறது.
பொதுவாகவே சந்திர கிரகம் என்பது பௌர்ணமி நாளில் தான் நிகழும். இந்த முறை ஆவணி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
அதிகமானவர்கள் இரவு நேரத்திலேயே திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
கிரகண நேரத்தில் நிலவின் ஒளி முழுவதுமாக மங்கும். பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் கிரிவலம் செல்வது என்ற அடிப்படையான விஷயமே பாதிக்கப்படுகிறது என்பதால் சந்திர கிரகண நேரத்தில் கிரிவலம் செல்வதை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கிரகணத்தின் போது வெளியில் சுற்றுவது, குறிப்பாக ஒரு புனித யாத்திரை செய்வது சாஸ்திர ரீதியாக பரிந்துரைக்கப்படவில்லை. கிரகண நேரத்தில் தியானம் செய்வது மிகுந்த பலன் தரும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
கந்த புராணம் மற்றும் அகஸ்தியர் கிரிவல மகிமை ஆகிய நூல்களில், கிரகண நேரத்தில் பக்தர்கள் வீட்டில் தியானம் செய்து, சிவன் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் அதிக ஆன்மிக பலனை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கிரகணத்தின் போது “ஓம் நம சிவாய” மற்றும் “மஹாம்ருத்யுஞ்ஜய” ஆகிய மந்திரங்களை உச்சரிப்பது பாப விமோசனத்தை அளிக்கும். கிரகண நேரத்தில் வெளியில் இருப்பதால் சிலர் உடல் நலப்பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர், குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே இருப்பது சிறந்ததாகும்.
கிரகணத்திற்குப் பிறகு நீராடி, கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் கிரிவலம் செல்லலாம். கிரகண நாளில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்?
கிரகணங்கள் ஏற்படும்போது அது மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகண நேரங்களில் கோவில்களை மூடிவிடுவார்கள். ஆனால், இதற்கான சரியான காரணம் பலருக்கு தெரியாது? சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், கிரகண நேரங்களில் தீயசக்திகளின் பலம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில்களை அடைத்துவிடுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை.
கிரகண காலங்களில் கோவில்கள் அடைக்கப்பட்டிருக்குமே தவிர கோவில்களில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்துக்கொண்டே தான் இருக்கும். திருவண்ணாமலை போன்ற கோவில்களில் கிரகணக் காலங்களில் தீர்த்தவாரி மற்றும் விஷேச பூஜைகள் நடக்கும்.
அத்தகைய பூஜைகளும், மந்திர பிரயோகங்களும் உலகில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும். இந்த நேரங்களில் விஷேசமான பூஜைகளை செய்வார்கள்.
அப்போது பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தால் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தான் கோவில்களை கிரகண நேரத்தில் மூடிவிடுகிறார்கள்.
கிரகண காலத்தை ‘புண்ணிய காலம்’ என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.
கிரகண காலத்தில் வீட்டில் குளித்துவிட்டு இறைவன் முன் அமர்ந்து வழிப்பாடு செய்துவிட்டு அவருடைய நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலே பல நன்மைகளை பெறலாம்.
இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல்ரீதியான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.




