Close
மார்ச் 7, 2026 1:34 மணி

ஒரு நிமிடத்தில் சிலம்பத்தால் முழங்காலை 118 முறை சுற்றி சாதனை: கின்னஸில் இடம் பிடித்த நாமக்கல் சிறுவன்

ஒரு நிமிடத்தில் 118 முறை முழங்காலில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த, நாமக்கல் சிறுவன் தேவசிவபாலனுக்கு, கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரு நிமிடத்தில், 118 முறை முழங்காலில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நாமக்கல் சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

மத்திய, மாநில அரசுகள், விளையாட்டுத் துறையில் இளம் வயதிலிருந்து மாணவ,- மாணவியரை ஈடுபடுத்தி, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

2 ஆண்டுகளுக்கு முன், கேலோ இந்தியா திட்டத்தில், சிலம்ப விளையாட்டை மத்திய அரசு இணைத்தது. அதையடுத்து, சமீப காலமாக, நாமக்கல் மாவட்டத்தில், இந்த விளையாட்டில் அதிக அளவில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும், மாநில அளவிலான போட்டிகளிலும், உலக சாதனை புத்தகத்திலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிலம்ப வீரர்கள், வீராங்கனைகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார், திவ்யா தம்பதியரின் மகன் தேவ சிவபாலன் (11). இவர், 6 வயது முதல், நாமக்கல் ஏகலைவா கலைக்கூடத்தில், சிலம்பம் கற்று வருகிறார்.

மாணவர் தேவசிவபாலன், நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இதை அறிந்த அவரின் பெற்றோர், சிலம்பத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை பயிற்சிக்கு அனுப்பினர். தொடர்ந்து, அலங்கார சிலம்ப பாடத்தில், முழங்கால் சுற்று பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டிராகன் ஜெட்லி முன்னிலையில், கடந்த, ஜனவரி 25ல், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், சிலம்ப கம்பை, தனது முழங்கால்களைச் சுற்றி அதிவேகமாக சுழற்றும் ஒருவகை சுற்று முறையை, ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சுற்றி ஒரு புதிய சாதனை படைத்தார்.

இவரது இந்த சாதனையை, லண்டன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கின்னஸ் நிறுவனத்தால் இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, மாணவருக்கு கடந்த, 28ம் தேதி, லண்டனில் இருந்து சாதனை சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிலம்பத்தை முழங்காலை சுற்றி கின்னஸ் சாதனை படைத்த இளம் மாணவரை, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி மற்றும் பிரமுகர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top