காதல் திருமணம் செய்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்தியா (19). அதே மாவட்டம், வணியம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம் (20).
இருவரும், 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து, ஜெயசந்தியா கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், வைத்தியலிங்கபுரம் அருகே வசித்து வரும் கூடலிங்கத்தை, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்கள் இருவரின காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால், கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், எனது தந்தை செந்தில்குமார் தி.மு.க., வில் உறுப்பினராக இருப்பதால், எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அதனால், வீட்டை விட்டு வெளியேறி, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள சிவன் கோவிலில், கடந்த ஆகஸ்ட் 26ல், காதல் திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம்.
எங்கள் மனுவை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்காமல், விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று மனு கொடுக்கும்படி அலட்சியமாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, வேண்டாவெறுப்பாக மனுவை பெற்றுக் கொண்டு எங்களை அனுப்பினர். எங்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதால், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.




