டிஎன்பிஎஸ்சி சீருடைப்பணியாளர் தேர்வில், காவலர் பணிக்கான தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், வருகிற 9ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள போலீஸ் பணியாளர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடியாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 9ம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்கப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சியும் வழங்கப்படும்.
நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில், பயின்ற மாணவர்கள், 2021-2022 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் காவலர் தேர்வில் 24 பேரும், எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும், 2022-2023 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் காவலர் தேர்வில் 17 பேரும், எஸ்.ஐ தேர்வில் 5 பேரும், 2023-2024 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் காவலர் தேர்வில் 22 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில், ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது சுய விபரத்தினை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.




