Close
மார்ச் 7, 2026 2:33 மணி

விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி: மோகனூர் பகுதி விவசாயிகள் அச்சம்

மோகனூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதால் பலியான ஆடுகள்.

விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், மோகனூர் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் – வளையப்பட்டி ரோட்டில், செவிட்டுரங்கன்பட்டியில், ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி., கந்தசாமிக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அவரது, விவசாய நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, விவசாயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு உள்ளிட்ட, 70 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரியும் 7 தெருநாய்கள், ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து நாய்களை விரட்டி அடித்தனர். நாய்கள் கடித்து குதறியதில், 5 வெள்ளாடுகள், 12 செம்மறி ஆடுகள் என, மொத்தம், 17 ஆடுகள் இறந்தன.

மேலும், காயம் அடைந்த ஆடுகளுக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர் அருண்குமார் தலைமையில், மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் வந்து சிகிச்சை அளித்தனர்.

நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால், கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். ஆனால், கம்பிவேலிக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது, அப்பகுதி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top