நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 409 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ. 90,194 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




