Close
மார்ச் 7, 2026 2:40 மணி

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி கடந்த 2003ம் ஆண்டு செப். 10 முதல் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை பிரச்சினைக்கான களங்கத்தைக் குறைப்பதற்கும், தற்கொலை தடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்த வருடாந்திர தினம் உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நாளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போதைய உலக தற்கொலை தடுப்பு தின கருப்பொருள், தற்கொலை பற்றிய விளக்கத்தை மாற்றுதல் என்பதாகும்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நேரேட்டிவ் ஆன் சூசைட் என்ற கருப்பொருளைக் கொண்டு, தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தற்கொலை எண்ணம் உடையவர்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.

இதில் 5 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். மேலும் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

முன்னதாக, உலக தற்கொலை தடுப்பு தினத்தை கடைபிடிக்கும் வகையில், ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

மேலும், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 105 அரசு கல்லூரிகள் மற்றம் பள்ளி மாவணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், துணை இயக்குநர் (காசநோய்) வாசுதேவன், துணை இயக்குநர் (தொழுநோய்) ஜெயந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top