நாமக்கல் அண்ணா நகர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, துறையூர் ரோடு அண்ணா நகரில் சக்தி விநாயகர், மாரியம்மன், அகிலாண்டேஸ்வரி உடனுறை அற்புதலிங்கேஸ்வரர், பாலதாண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் புதிய கோபுரங்கள் மற்றும் அர்த்த மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இன்று 12ம் தேதி காலை 6 மணிக்கு திரளான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று, புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இரவு 108 வகை மூலிகை பொருட்களால் முதற்கால யாக சாலை பூஜை நடைபெறும்.
நாளை 13ம் தேதி காலை 8.30 மணிக்க 2ம் கால யாகசாலை பூஜை நடைபெறும். மதியம் கோபுர கலசங்கள் அமைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு 3ஆம் யாக சாலை பூஜை நடைபெறும். இரவு 9 மணிக்கு சாமி விக்கிரகங்கள் நிலை பெறச்செய்து மருந்து சார்த்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை மறுநாள் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும். பின்னர் தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து மூலவர் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதானை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.




