நாமக்கல் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் உள்ள, விஸ்ரூப ஆஞ்சேநேயர் கோயில் ரூ.1.33 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புராண சிறப்பு பெற்ற கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையில் பழமை வாய்ந்த கல் மண்டபத்தில், விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள மண்டபத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சமயத்தில் நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் மண்ணில் புதைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இங்கு விழா நடத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு கோயிலில் இருந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் பாலாலயம் செய்து அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இதனிடையே இடிந்து விழும் நிலையில் இருந்த கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கோயிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதியளித்தது. மேலும் திருப்பணிக்காக ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இதையடுத்து கோயில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. கோயில் உதவி ஆணையர் இளையராஜா தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செல்வசீராளன், ராம ஸ்ரீனிவாசன், டாக்டர் மல்லிகா, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் ஆகியோர் பங்கேற்று கோயில் புதுப்பிக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




