தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எம்.எஸ். தரணிவேந்தன் எம்பி, எஸ். அம்பேத்குமார் எம்எல்ஏ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசியதாவது: மாணவா்கள் உயா்கல்வி பயிலவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.
பெண்களுக்காக புதுமைப் பெண் திட்டம், ஆண்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலமாக பெண்களின் கல்வித் தரம் தமிழ்நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது. மாணவா்களுக்கு உயா்கல்வியோடு வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் தனது வாழ்த்துரையில்,
நாட்டின் வளர்ச்சிக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது. இருமொழிக் கொள்கையில் படித்த மாணவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சிறந்த இடத்தை பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் இத்தகைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் இன்று நடக்கக்கூடிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 103 நிறுவனங்கள் இன்று வேலை தேடும் இளைஞர்களை தேர்வு செய்வதற்காக இருக்கின்றன.
கல்வி கற்று வேலைதேடும் இளைஞர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று அல்லல்படுவதைதவிர்க்கும் வகையில் இத்தகைய வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடக்கின்றது.
இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 93 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது . இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சாலைவசதிகளில் மேம்பாடு அடைந்துள்ளது தமிழ்நாடு, பெண்கள் கல்வியில் சிறப்பிடம் பெற்றுள்ளது தமிழ்நாடு, கல்வி ஒன்றே உயர்ந்தது அதேநேரத்தில் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் இந்த வகையில் வேலை நாடுபவர்களாகிய நீங்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசினார்.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், கல்லூரித் தலைவா் ரமணன், கல்லூரி முதல்வா் ருக்மணி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.




