நகை திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஏ.எஸ்.பி அலுவலகத்தில், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்,
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாட்டத்தில் நடைபெற்ற, கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுதுவரை 55 டி.எஸ்.பி அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களின் பணி தொடர்பாக நடைபெறுகிறது. தமிழகத்தில், சமீபத்தில் காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால் உரிய பாதுகாப்பும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது
பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது. இதனால் போக்சோ வழக்குகள் படிப்படியாக குறைந்து வருகின்றன
நகை திருட்டு வழக்குகளை குறைப்பதற்கு பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன் வரவேண்டும் என்றார்.




