புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு சுவாமிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், திருமஞ்சள், சீயக்காய்த்தூள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது.
இதனையடுத்து தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருக்கோயில் உதவி கமிஷனர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.




