Close
மார்ச் 7, 2026 2:51 மணி

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில், விவசாயிகள் ஏல விற்பனைக்காக கொண்டுவந்த பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 800 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல், புதுச்சத்திரம், காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம், வளையப்பட்டி, மோகனூர், பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள்.

திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வார்கள்.

இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 800 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில், ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ. 7,499 முதல் ரூ. 7,999 வரை ஏலம் போனது. சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் 8,166 முதல் 8,300 வரை ஏலம் போனது.

மட்ட ரக கொட்டுப்பருத்தி ஒரு குவிண்டால் 4,700 முதல் ரூ. 5,300 வரை ஏலம் போனது. மொத்தம் 16.96 டன் எடையுள்ள, 800 மூட்டை பருத்தி ரூ. 20 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top