வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2ஏ போட்டித் தேர்வு வருகிற 28ம் தேதி, காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு தாலுகாக்களில் மொத்தம் 55 தேர்வு மையங்களில், 16,108 பேர் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்விற்கு சப் கலெக்டர் நிலையில் 6 பறக்கும் படை அலுவலர்கள், டிஆர்ஓ நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நடமாடும் குழுவினர், வினாத்தாள்கள் உள்ளிட்ட தேர்வு பணி பொருட்களை தேர்வுமையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் காலை 9.00 மணிக்கு முன்னதாக சென்றுவிடவேண்டும், காலை 9.00 மணிக்கு பின்னர் எக்காரணம் கொண்டும் தேர்வு கூடத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மையங்களுக்கு எளிதாக செல்ல கூடுதல் போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதிகள், தேர்வு மையங்களுக்கு உரிய காவல்துறைபாதுகாப்பு வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




