நாமக்கல்லைச் சேர்ந்த கிளாரினெட் இசைக்கலைஞர் பிரபு, தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த மறைந்த கிளாரினெட் வித்வான் வேணுகோபாலின் மகன் பிரபு. இவர் தனது சிறு வயது முதல் தனது தந்தையாரிடம் முறையாக கிளாரிநெட் இசை பயின்று, அவரோடு இணைந்து பல ஆண்டுகள் கச்சேரி செய்து வந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு தனியே குழு அமைத்து ஏராளமான அரசு விழாக்கள், முக்கிய கோயில் கும்பாபிசேக விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கிளாரினெட் இசை நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர்.
இவரது இசை சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், மாவட்ட விருதான கலை சுடர்மணி விருதும் தனியார் அமைப்புகள் சார்பில் சாதனைச்சுடர், கிளாரிநெட் இசை இளவரசு, நாமக்கல் ஓசை போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாட்டு புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் நிர்வாக குழு உறுப்பினராகவும் பிரபு பணியாற்றியுள்ளார்.
தற்போது தமிழக அரசு, நாமக்கல் கிளாரினெட் இசைக்கலைஞரின் இசை சேவையைப் பாராட்டி, அவருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு விருது வழங்கி பாராட்டுவார்.




