இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, மரக்கன்றுகளை நடவு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்த 10ஆண்டுகளுக்குள், ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமான, பசுமை தமிழகம் இயக்கத்தை கடந்த 2022, செப். 22ல் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை, மாநிலத்தின் மொத்த பரப்பளவில், 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுப்படுதல், நீர்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயர்த்துல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
அதன்படி, தற்போது, வேம்பு, புங்கன், நாவல், நீர்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட, 200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதன் உயரிய நோக்கம், மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நடவேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம், நம் தலைமுறை கடந்தும், நமது சந்ததிகளை பாதுகாக்கும்.
அதனால், இன்றைய இளைய தலைமுறையினர் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பசுமை பள்ளிகளுக்கிடையே நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.




