திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி தொடக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கமானது மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமானது தமிழகத்தில் வனப் பரப்பை 33 சதவீதமாக 2030-31 ஆம் ஆண்டுக்குள் உயர்த்துவது ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள காடுகள், அரசாங்க நிலங்கள், விவசாய நிலங்களில் பல்வேறு துறைகள் மூலம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் அரசு துறைகள் மட்டுமல்லாமல் தன்னர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து மக்கள் திட்ட மாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 24ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்க தினமாக அறிவிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டபேரவை துணைத்தலைவர் , மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாநகராட்சி துணைமேயர் ராஜாங்கம், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் வினோத்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




