திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு, தீயணைப்பு வாகன சேவையையும் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை 2024-2025ன் போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பாதுகாப்புக்காக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, புதிய நிரந்தர தீயணைப்பு மற்றம் மீட்புப் பணிகள் நிலையம் ஏற்படுத்தப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு நிலையத்தை திறந்துவைத்துப் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 14 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, அருணாசலேஸ்வரா் கோயில் பகுதியில் கூடுதலாக ஒரு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பல துறைகள் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு அமைப்பாகும்.
இது அவசரகால சூழ்நிலைகளில் பல்வேறு பணிகளை செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு காா்த்திகை தீபத்திருவிழாவுக்கு சுமாா் 40 லட்சம் பக்தா்கள் வருவாா்கள்.
சித்திரை பௌா்ணமிக்கு சுமாா் 20 லட்சம் பக்தா்கள் வருவாா்கள். மாதந்தோறும் வரும் பௌா்ணமிக்கு சுமாா் 2 லட்சம் பக்தா்கள் வருவாா்கள். அந்த சமயங்களில் தீ விபத்து, இயற்கை பேரிடா் மற்றும் விபத்து ஏற்பட்டால் துரிதமாக சென்று சேவை புரியவும் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநா் விஜயகுமாா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (வட மேற்கு மண்டலம்), தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் சரவணன், உதவி மாவட்ட அலுவலா் சரவணன், போக்குவரத்து நிலைய அலுவலா் மணி, அருணாசலேஸ்வரா் கோயில் பழனிச்சாமி, போளூா் நிலைய அலுவலா் காா்த்திகேயன், கீழ்பென்னாத்தூா் நிலைய அலுவலா் மதியழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.




