நாடு முழுவதும் தேங்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது வீடுகளையும், சிறு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையின் தாக்கம், சிப்ஸ்கள் முதல் அன்றாட குழம்புகள் மற்றும் சட்னிகள் வரை அனைத்திலும் பிரதிபலிக்கிறது.
தென்னிந்தியா மற்றும் கோவா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தேங்காய் விலை சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 15-ரூ. 25 ஆக இருந்தது, இப்போது ரூ. 80 முதல் ரூ. 100 வரை உயர்ந்துள்ளது. இளநீரின் விலையும் பெருநகரங்களில் ரூ. 100 வரை விற்கப்படுகிறது.
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், லிட்டருக்கு ரூ. 150-ரூ. 200 என்ற விலையிலிருந்து, ரூ. 400-ரூ. 500 வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல இடங்களில் தேங்காய் சட்னியின் அடர்த்தி குறைந்து, நீர்த்த நிலையில் வழங்கப்படுகிறது.
கேரளாவின் பாரம்பரிய உணவுகள், கொங்கண் பகுதியின் சோல்கடி மற்றும் தோரன் போன்ற உணவுகளின் சுவை மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைக் காலங்களில், சமையல் மற்றும் சடங்குகளுக்குத் தேவையான தேங்காயை வாங்குவது சவாலாக மாறியது. ஓட்டல்கள் மற்றும் சிறு தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தங்கள் லாப வரம்பில் 30% வரை இழப்பைச் சந்தித்துள்ளன. விலையைச் சமாளிக்க முடியாதவர்கள், சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடலை எண்ணெய்க்கு மாறுவதைக் பரிசீலித்து வருகின்றனர். சிலர், தேங்காய் எண்ணெயின் மணமே பிரதானமான உணவுகளுக்கு மட்டும் அதைப் பயன்படுத்துகின்றனர்.
விலை உயர்வு காரணமாக, கேரளாவில் இரவில் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோவா, அதன் தேவையில் 40% மட்டுமே ஈடு செய்ய முடிவதால், எஞ்சிய 60% தேங்காயை அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்கிறது. விடுமுறைக் காலம் நெருங்குவதால், விலைகள் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறைக்கான காரணங்கள்
இந்த தேங்காய் பற்றாக்குறை பல காரணங்களால் ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்:
- இந்தியாவின் பெரும்பாலான தென்னந்தோப்புகள் 45 ஆண்டுகளுக்கும் மேலான ‘வயதான’ மரங்களைக் கொண்டுள்ளன. முறையான மற்றும் தொடர்ச்சியான மறு நடவு செய்யப்படாததால், ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது.
- வெள்ளை ஈ மற்றும் தேங்காய் உண்ணி போன்ற பூச்சிகளின் தாக்குதல்கள், தென்னந்தோப்புகளைப் பெரிதும் பாதித்துள்ளன. அத்துடன், குரங்குகளின் தொல்லையும் சில பகுதிகளில் விளைச்சலைக் குறைத்துள்ளது.
- சீரற்ற மழைப்பொழிவு, நீண்ட வெப்ப அலைகள் மற்றும் மண்ணின் தன்மை மாற்றம் போன்ற காலநிலை சார்ந்த காரணிகள் மரங்களின் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, மகசூலைக் குறைத்துள்ளன.
- ஊரடங்கு காலத்தில் பல தோட்டங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதால், அதன் தாக்கம் இப்போது விளைச்சலில் தெரிகிறது.
| ஆண்டு | பரப்பளவு (‘000 ஹெக்டேர்) | உற்பத்தி (மில்லியன் கொட்டைகள்) | உற்பத்தித்திறன் (ஹெக்டேர்) |
| 2015–16 | 2,088.47 | 22,167.45 | 10,614 |
| 2016–17 | 2,082.11 | 23,904.10 | 11,481 |
| 2017–18 | 2,096.72 | 23,798.23 | 11,350 |
| 2018–19 | 2,150.89 | 21,288.24 | 9,897 |
| 2019–20 | 2,173.28 | 20,308.70 | 9,345 |
| 2020–21 | 2,198.98 | 20,736.12 | 9,430 |
| 2021–22 | 2,153.74 | 19,309.90 | 8,966 |
| 2022–23 | 2,277.18 | 20,535.88 | 9,018 |
| 2023–24 | 2,165.20 | 21,373.62 | 9,871 |
விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, தேங்காய் சாகுபடிக்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், உகந்த சூழ்நிலையில் கூட, தேங்காய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, அடுத்த அறுவடைக் காலத்தில் ஓரளவு விலை குறைந்தாலும், தேங்காயின் விலை இப்போதைக்கு கணிசமாகக் குறைய வாய்ப்பில்லை. தேங்காய் எண்ணெய் ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்படும் சூழல் நீடிக்கும் என்று கூறுகின்றனர்




