நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில், 66 படுக்கை வசதிகளுடன், ஒருங்கிணைந்த அரசு ஆயுஷ் மருத்துவமனையை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாளை திறந்து வைக்கிறார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர், ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளமான தமிழகத்தின் நலம் காக்கும் நோக்கில் 2022- 23ம் ஆண்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கும் சித்த மருத்துவத்திற்கு, நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலம் கடந்த 7.3.2024 அன்று 50 படுக்கைகள்கொண்ட ஆயுஷ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாநடைபெற்றது.
தற்போது, ரூ. 1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கென சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிதியும் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் விரைவில் துவக்கப்பட உள்ளது.
இந்த மருத்துவமனையில், சித்தமருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பொது மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம், முன் பின் பேறுகால கவனிப்பு, குழந்தை பேரின்மைக்கான சிறப்பு மருத்துவம், முதியோர் நலம், மனநலபிரிவு, தொற்றும் மற்றும் தொற்றா நோய் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, வர்ம சிகிச்சை பிரிவு, 32 வகையான சித்த மருத்துவத்தின் புறமருந்து சிகிச்சைகள், மனநலம் காக்கும் யோக மருத்துவமும் வழங்கப்பட உள்ளது.
மேலும், ஹோமியோபதி துறை சார்ந்த சிகிச்சைகளும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படும். மருத்துவமனையில் பணியாற்ற மருந்தாளுநர்கள், லேப் அசிஸ்டெண்ட், சிகிச்சை உதவியாளர், நர்சிங் தெரபிஸ்ட், அமைச்சுப் பணியாளர்கள், பல்நோக்கு பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 57 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
தமிழக முதல்வரின் அனுமதியுடன், விரைவில் இந்த மருத்துவமனை, சித்த மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
நாளை 2ம் தேதி, காலை 10 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் புதிய ஆயுஷ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




