தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம், நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) கடந்த அக். 28 முதல் துவங்கியது. அதையடுத்து, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எஸ்ஐஆர் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், வரும் 4ம் தேதி முதல், டிச., 4 வரை, எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடக்கிறது. இந்த முகாம் நடப்பது மிக மிக நல்லது. காரணம், நாங்கள் பலமுறை இறந்த வாக்காளர்களை, வெளியூர் சென்ற வாக்காளர்களை நீக்குவதற்கு எழுதி கொடுத்தும், நீக்காமல் பட்டியலில் இருந்தது.
தற்போது தேர்தல் ஆணையமே அந்த திருத்தத்தை மேற்கொள்வதை வரவேற்கிறோம். அனைவரும் அதற்கு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அதேபோல், அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர் ஒவ்வொருவரும், அரசு அலுவலருடன் சென்று, எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது. அதேபோல், போலி வாக்காளர்களை சேர்க்க கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டி அறிவுரை வழங்கி இருக்கிறோம்.
ஒவ்வொரு பூத்திலும், 30, 40 இறந்த வாக்காளர்களும், அடையாளம் தெரியாத வாக்காளர்களும், வெளியூர் சென்ற வாக்காளர்களும் பட்டியலில் உள்ளனர். அவற்றை நீக்க கூடாது என்பதற்காக, திமுகவினர் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கின்றனர்.
இந்த அரசு எப்படி மக்களை கவனிக்கவில்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். தமிழகம் முழுவதும் மழை பெய்து அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த ஆண்டில், மேட்டூர் அணை 7 முறை நிரம்பி இருக்கின்றது.
கடந்த ஒரு வார காலமாக, மேட்டூர் இடது கரை, வலது கரை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் செய்தோம். இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நெற்பயிர் எல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறது. உடனடியாக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, பாசன வாய்க்காலில் தண்ணீர் விடவேண்டும் என்று கூறினார்.




