லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்து அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார் ஆகியோர் சென்னையில், தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி, பல ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் லாரிகளுக்குபோலீசார் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதில் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. லாரிகள் வெளி மாநிலத்தில் இருக்கும் போது, தமிழகத்தில் விதிமுறைகளை மீறிச்சென்றதாக, தவறாக ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், ஆர்டிஓ அலுவலகங்களில் வாகன பதிவு, எப்.சி போன்ற பணிகள் முடிவடைந்த பிறகு தபால் மூலம் ஒரிஜினல் ஆவணங்களை அனுப்புவதால் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது.
எனவே ஆவணங்களை நேரடியாக வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டம், ஏலூர் மற்றும் மோகனூர் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




