சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளார். நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ், இன்று அதிகாலை அவர் கொல்லிமலையில் இருந்து, அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை, சுமார் 25 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சுப்பிரமணியம், சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம், மருத்துவர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாப்பான, சுகாதாரமான மருத்துவ சேவைகளை வழங்க டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




