கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
இந்தநிலையில், ஐப்பசி மாத பெளர்ணமி நேற்று 4ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.37 மணிக்கு துவங்கி இன்று 5ம் தேதி இரவு 7.20 மணிக்கு நிறைவடைகிறது. .
இந்நிலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவே அன்னாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றதால் அப்போது முதலே பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி வரத் தொடங்கினர்.
தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கி இன்று காலை விடிய விடிய பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயில் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழியாக வந்த பக்தர்களின் வரிசை தேரடி வீதியையும் தாண்டி சுமார் அரை கீலோ மீட்டருக்கு பூத நாராயண பெருமாள் கோயில் வரை நீண்டிருந்தது.
பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் கோயிலில் கட்டண தரிசனம் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அன்னாபிஷேகம்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்காம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரருக்கு நவம்பர் 4 அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 100 கிலோ அரிசி, பல்வேறு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்து இறை அருளைப் பெற்றனர்.
மேலும் திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் இருக்கும் திருநோ்அண்ணாமலையாருக்கு ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கிரிவலம் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




