மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (59) என்பவர்ஓட்டி வந்தார்.
அதேபோல் புறப்பட்டு மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி மேல்கூடு இல்லாத பேருந்து வந்தது அந்த பேருந்தை செக்கானூரணி கிண்ணி மங்கலத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.
மதியம் 3 மணிக்கு அந்த பேருந்துவாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் இடையில் மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதேபோல் பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி தூரம் சென்று வயல்வெளிக்குள் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர் இருவரும் உயிர் தப்பினர். இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மட்டும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
லாரி கவிழ்ந்ததால் டீசல் மற்றும் பெட்ரோல் லாரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி அந்தப் பகுதி முழுவதும் ஆறாக ஓடியது. மேலும் லாரி கவிழ்ந்த இடத்தில் மேல்புறம் உயர் மின்னழுத்த கம்பி செல்வதால் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
தகவல் அறிந்த சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்தராஜ், வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி, காவல் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், திவ்யா மற்றும் காவலர்கள் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், உதவி மின் செயற் பொறியாளர் செந்தில், உதவி மின் பொறியாளர்கள் பரமேஸ்வரன், பரமேஸ்வரி, போர்மேன் கிருஷ்ணமூர்த்தி. மதுரை இந்தியன் ஆயில் நிறுவன பணியாளர்கள் தீ விபத்து நேராதபடி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் பெட்ரோல் முழுவதும் வடிந்த பின் சாரல் மழையில் இரவு 7.30 மணிக்கு லாரியை மீட்டனர்.




