கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல்லில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிழக்கு மற்றும், மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பாஜ மகளிர் அணி தலைவி மீனா போராட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து மகளிர் அணியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தமிழகத்தில் குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ள கள்ளச்சாராய சந்து கடைகளை மூட வேண்டும், பெண்கள் தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, எவ்வித சமரசமும் இன்றி தண்டிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாஜக மகளிர் அணியினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் ஜெயந்தி, மாநில ஓபிசி பிரிவு துணைத்தலைவர் சத்தியபானு, மகளிரணி ராதிகா, திவ்யா, ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




