கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் முறியடிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார், டெல்லியில் உச்சநீதிமன்ற வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மேகதாதுவில் காவிரியின் குறுக்@க அணை கட்டுவது தொடர்பான வழக்கு தாமதமாவதை விரும்பவில்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பு இல்லை என கூறியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதியில் ஆண்டுக்கு 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நெல் சாகுபடி செய்ய முடியாமல், பாலைவனமாக மாறிவிடும். மேகதாது வழக்கு சம்மந்தமாக தமிழ்நாட்டின் உரிமையை சுப்ரீம் கோர்ட் மூலம் நிலைநாட்டி தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தர தி.மு.க. அரசு விரைவாக செயல்பட வேண்டும்.
மேலும் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிதான் கர்நாடாகாவில் ஆட்சி செய்கிறது. எனவே கூட்டணி ஆதாயத்திற்காக மேகதாது விவகாரம் சம்மந்தமாக பாரபட்சத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக தி.மு.க. அரசு செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




