பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ம் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைவர் டி.ஜி.பி. வெங்கட்ராமன் ஆய்வு செய்தார்.
அப்போது பரணி தீபம் ஏற்றப்படும் போது சாமி மற்றும் அம்மன் சன்னதியில் கோவிலில் மக்கள் கூடும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் குறித்தும், மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் வி.ஐ.பி.கள் அமரும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் விழாவின் போது கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் தடுப்பது, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட எஸ்.பி. உடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
கோவிலில் சாமி சன்னதியில் இருந்து ராஜகோபுரம் வரையில் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்ட அவர், விழா நாட்களில் சாமி வீதி உலா நடைபெறும் மாடவீதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கிரிவலப்பாதை, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ள இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது டி.ஜி.பி. அலுவலக காவல்துறை செய்தி தொடர்பு அலுவலர் முத்தரசி, வேலூர் சரக டி.ஜ.ஜி. தர்மராஜன், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.




