Close
மார்ச் 7, 2026 12:59 மணி

வரும் 14ம் தேதி திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் சிறுமிகளுக்கான தடகளப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்.பி., சின்ராஜ், செயலாளர் வெங்கடாசலபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை உலக அளவில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகள் அளிக்கப்படுகிறது.

அதன்படி அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதிலும் 300 மாவட்டங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் நாமக்கல் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட அளவிலான இந்த தடகளப் போட்டிகள் வரும் 14ஆம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 21.12.2011 முதல் 20.12.2013க்குள் பிறந்த பெண் சிறுமிகள் கலந்துகொள்ளலாம்.

16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 21.12.2009 முதல் 20.12.2011க்குள் பிறந்த பெண் சிறுமிகள் கலந்துகொள்ளலாம். 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு டிரையத்லான் பிரிவு ஏ,பி,சி மற்றும் கிட்ஸ் ஜாவலின் என நான்கு போட்டிகளும்,16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60மீ, 600மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என 7 போட்டிகள் நடைபெறுகின்றது.

போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தியை 9444879213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top