தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலார் மூர்த்தி, கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் மற்றும் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து ராஜேஷ்குமார், எம்.பி., பேசியதாவது:
தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக பல வாக்காளர்கள் விடுபட வாய்ப்பு உள்ளது. குறைந்த கால அவகாசம் உள்ள நிலையில் பீகாரில் 60 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள். சிறுபான்மையினர், பழங்குடியினர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் நீக்கப்பட்டார்கள்.
அதே போன்ற நிலைக்காக தமிழ்நாட்டில் முயற்சிக்கிறார்கள். இங்கேயும் பல லட்சம் திமுக ஆதரவு வாக்குகளை நீக்கலாம் என நினைக்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை தெரிந்து கொண்டே இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முறைகேடுகளை திமுக கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்தும். தமிழகத்தில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப்பெண் , மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, கலைஞர் கனவு இல்ல திட்டம் @பான்ற திட்டங்கள் மூலம் 2 கோடி வாக்காளர்கள் பயனடைந்துள்ளார்கள். இவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேரை நீக்கிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. அது நடக்காது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது நிச்சயம் இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநில மகளிர் தொண்டரணி இணை அமைப்பாளர் ராணி என்பவர் திடீரென மயக்கம் அடைந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாகனத்தின் மூலம் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.




