அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் தனசேகரன் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே, புதிய அரசு மருத்துவமனைகள் துவக்கப்பட வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.
கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. திரளான அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.




