திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது,
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் 2025 திருத்தம் சரியான முறையில் நடைபெற்று வருகிறதா, படிவங்கள் அனைத்தும் மக்களை தேடி வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி படிவத்தை பூர்த்தி செய்து சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்ததில், இதுவரை ஒவ்வொரு பூத்துக்கும் முதல் கட்டமாக சுமார் 300 படிவங்கள் மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக படிவங்கள் கட்டாயம் வழங்கப்படும்.
யாருக்கும் படிவங்கள் வழங்கவில்லை என்று எந்த ஒரு பிரச்சனைகளும் வரக்கூடாது. அனைவருக்கும் படிவங்களை அவரவர்கள் இல்லம் தேடி கொடுக்க வேண்டும்.
அதேபோல் படிவம் பூர்த்தி செய்யும் பொழுது படிவங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரி பார்க்க வேண்டும். படிவங்கள் வழங்கி திருத்தும் பணியில் விருப்பு வெறுப்பு காட்டாமல் அனைவருக்கும் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் படிவங்கள் அனைத்தும் சரியான முறையில் இல்லங்கள் தேடி வழங்க வேண்டும் அப்படி வழங்கவில்லை என்றால் உடனடியாக எங்களிடம் தகவல் கூறுங்கள், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்குமரன், வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் சுதாகர், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
எம்எல்ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள காப்பலூர், வன்னியனூர், மோட்டூர், மேல்வில்வராயநல்லூர், மேலாரணி, சேங்கபுத்தேரி, சிறுவள்ளூர், எர்ணமங்கலம், சோழவரம், எலத்தூர், பூண்டி, கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, பில்லூர், பழங்கோயில், கீழ்ப்பத்தரை, ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் 2025 திருத்தம் பணி நடைபெற்று வருவதை, சரவணன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் பணிகள் அனைத்தும் சரியான முறையில் நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்யும் படிவங்கள் அனைத்தும் சரியான முறையில் பதிவு செய்து வழங்க வேண்டும், படிவங்கள் பூர்த்தி செய்யும்பொழுது சந்தேகம் ஏதாவது இருந்தால் அருகில் உள்ள பி.எல்.ஓ அலுவலர்களிடம் கேட்டு சரியான முறையில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர், அணி அமைப்பாளர்கள், ஒன்றிய துணை செயலாளர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.




