Close
ஏப்ரல் 24, 2026 1:06 காலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கோயில்கள் மட்டுமின்றி, இந்துக்களின் வீடுகளிலும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்வது வழக்கம்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, மண்பாண்ட தொழிலுக்கு ஏரியில் இருந்து களிமண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாட்டு வண்டியில் மண் ஏற்றி வருகிறோம். இதற்க, ரூ. 500 வரை வாடகை கொடுக்கப்படுகிறது.

நாங்கள், பாரம்பரியமான ஒரு முகம் அகல் விளக்கை மட்டுமே தயாரிக்கிறோம். மண் கொண்டு வந்தபிறகு, அதனை பதப்படுத்த வேண்டும். இது சற்று சிரமமாக இருக்கும். மண்ணை பதப்படுத்த இயந்திரம் வந்தாலும், பொருளாதார வசதி இல்லாததால், மனித உழைப்பு மூலமாகவே மண்ணை பதப்படுத்துகிறோம்.

பின்னர், சக்கரத்தை சுழற்றி பதப்படுத்தப்பட்ட களிமண்ணை கொண்டு, அகல் விளக்கு தயாரிக்கப்படுகிறது. ஒருவர், தினசரி 350 முதல் 400 அகல் விளக்குகளை தயாரிக்கின்றோம். அதன்பிறகு, அகல் விளக்கை நன்றாக உலர வைத்து, நெருப்பை மூட்டி மிதமான சூட்டுடன் வேக வைக்கிறோம். இதில், 90 சதவீத அகல் விளக்குகள் தரமாக கிடைத்துவிடும் என கூறினர்

தற்போது மழை இல்லாத காரணத்தால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், பருவமழைக்கு முன்பே விளக்குகளை தயார் செய்து முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இன்றைய நவீன யுகத்தில் அச்சு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள், பீங்கான் விளக்குகள் உள்ளிட்டவையின் வரத்து காரணமாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளின் விற்பனை பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், அகல் விளக்குகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான வண்டல் மண் கிடைப்பதில் சிரமம் நீடிப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே, தங்கள் பகுதியிலேயே வண்டல் மண் எடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வெளிச்சத்தை பரப்பத் தயாராகும் இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், அவர்களது வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பாரம்பரியமிக்க இந்தத் திருவிழாவிற்குத் தேவையான விளக்குகளும் தடையின்றி சென்றடையும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top