திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு மட்டுமே குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, பக்தர்களால் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து, அருணாசலேஸ்வரரை வணங்கி, கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் இருந்து கிரிவலம் செல்கிறார் என்று கூறப்படுகிறது.
கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியும், சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில், சிவனை வழிபட்டு குபேரனே கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கர்மவினையின் பயனாக வரும் துன்பங்களில் ஒன்று தான் பணக்கஷ்டம். இதற்கு குபேர கிரிவலம் நிரந்தரத் தீர்வாக அமையும். பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை உருவாக்கி தருவது தான் குபேர கிரிவலம்.
இந்த வருடம் குபேர கிரிவலம் 18.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 8.16 முதல் 19.11.2025 புதன் கிழமை காலை 10.11 வரை இருக்கிறது.
அதென்ன குபேர கிரிவலம்
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் இந்த பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.
அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்வாராம். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்குமாம். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் வாழ்வோம் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் பக்தர்கள் தெரிவிக்கையில் அந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்; மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் வடக்கு திசை 1,008 முறை சிவபஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது. ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை (ஓம்-நமசிவாய) மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.
கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறுநாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேர கிரிவலத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்குமாம்.
ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை. கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டுமாம்.
இந்த குபேர கிரிவலம் சமீபத்தில் தான் தோன்றியது. இந்த குபேர கிரிவலத்தை குறித்து எந்தவிதமான புராண சான்றுகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என பக்தர்கள் கூறுகின்றனர்.
பக்தர்கள் கோரிக்கை
மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று கிரிவலம் வருவார்கள் என்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.





