கார்த்திகை மாதம் தொடங்கியதால், நாமக்கல் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும்.
இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோயில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
இதையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
காலை 5 மணி முதல் ஏராளமான பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பியவாறு, குருசாமி மூலம் மாலை அணிந்து விரதம் துவங்கினர். ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள், இருமுடி கட்டி, மண்டல பூஜையின்போது ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, வீட்டிற்கு வந்து, விரதத்தை முடித்துக் கொள்வர்.
அதிகாலையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நாமக்கல் ஐயப்பன் கோயிலுக்கு வந்ததால், மோகனூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.




